ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த உத்தரவிடக்கோரி சுப்ரமணிய சுவாமி மீண்டும் மனுத்தாக்கல்!
இந்தியா- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்கான சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் கடவுள் ராமரால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் "ராமர் பாலத்தை" இடித்து இந்த சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற போவதாக ராமபக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து ராமர் பாலத்தை பாதுகாக்கவும், அதனை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரியும் கடந்த 2005ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆடம்ஸ் பாலம் (அல்லது) ராமர் பாலம் எந்த விதத்திலும் சிதைக்கப்படக்கூடாது என 2007ம் ஆண்டு இடைக்காலமாக உத்தரவிட்டது.
இதனிடையே சேது சமுத்திர திட்டத்தின் தாக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்செளரி தலைமையில் குழுவை அமைப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட பச்சௌரி குழு , பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக இந்த திட்டம் சாத்தியமற்றது என்று தனது அறிக்கையில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாயின.
அதன் பின்னர் இந்த சேது சமுத்திரத் திட்டம் கிட்டத்தட்ட கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2012ம் ஆண்டு பிரமாணபத்திரம் தாக்கல் செய்தது. அதேபோல, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி சார்பிலும் கடந்த 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட் அமர்வில் கடந்த 19/01/2023 அன்று விசாரணைக்கு வந்தபோது , ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பான விவகாரத்தில் மத்திய கலாச்சார அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், எனவே மனுதாரரான சுப்பிரமணியன்சுவாமி தேவைப்பட்டால் மத்திய கலாச்சார அமைச்சகத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்யலாம் எனவும் மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
இதனையடுத்து சுப்பிரமணியன் சுவாமி மத்திய கலாச்சார அமைச்சகத்தில் இதுதொடர்பாக கோரிக்கை மனு அளிக்க அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பின், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் எனவும் சுப்பிரமணியன்சுவாமிக்கு அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி தற்போது உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்துள்ளார்
அதில், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை மனு கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, பலமுறை மத்திய அரசிடம் மனு கொடுத்ததாகவும், ஆனால் இதுவரையில் எந்த பதிலும் வரவில்லை. எனவே ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார் .