ஈரான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் - 78 பேர் உயிரிழப்பு!
ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது நேற்று ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய அணு ஆயுத தளம் பலத்த சேதம் அடைந்தது.
இதனால் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்- ஈரான் ஆகிய இரு நாடுகளும் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உட்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 320க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாக ஈரானின் ஐ.நா., தூதர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இந்த தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து இன்று அதிகாலை வரை இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இஸ்ரேல் பல ஈரானிய ஏவுகணைகளை அமெரிக்காவின் உதவியுடன் இடைமறித்ததாகக் கூறியது. இந்த நிலையில் இரு நாடுகளும் மேலும் தாக்குதல்களைத் தொடரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.