ஈரான் தொலைக்காட்சி நிறுவனம் மீது இஸ்ரேல் தாக்குதல்... நூலிழையில் தப்பிய செய்தி வாசிப்பாளர் - அதிர்ச்சி தரும் நேரலை காட்சிகள்!
ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது கடந்த 13ம் தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய அணு ஆயுத தளம் பலத்த சேதம் அடைந்தது. மேலும் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.
இதற்குப் பதிலடியாக, நேற்று முன்தினம் காலை வரை ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இந்த தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 34 பேர் காயமடைந்தனர். மேலும் ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் 19 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் நேற்று (ஜுன் 16) ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்த போது அரசு செய்தி நிறுவனத்தின் பெண் செய்தி வாசிப்பாளர் சாகர் இமாமி என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏவுகணை ஒன்று அந்த கட்டிடத்தை கடுமையாக தாக்கியது. நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த அவர், கட்டிடம் இடிந்து சிதறுவதை கண்டதும் எழுந்து ஓடினார். இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்த கட்டிடம் முழுமையாக சேதமடைந்தது. காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. தாக்குதல் நடந்த போதும் ஈரான் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.