இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது கடந்த 13ம் தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் நடந்து வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இதன் காரணமாக ஈரான் அமெரிக்க விமானப்படை தளமான அல் உதெய்த் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனிடையே தாக்குதல் குறித்த முன்னறிவிப்புக்காக ஈரானுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 6 மணி நேரத்தில், இஸ்ரேலும் ஈரானும் தங்கள் இறுதிப் பணிகளை முடித்த பிறகு 12 மணிநேர போர் நிறுத்தம் தொடங்கும். அப்போது போர் முடிந்ததாக கருதப்படும். அந்த 12 மணிநேர போர் நிறுத்தத்தின் பின், ஈரான், இஸ்ரேல் தங்கள் போர் நிறுத்ததை நீட்டிக்கும். 24வது மணி நேரத்தில், 12வது நாள் போரின் அதிகாரப்பூர்வ முடிவை உலகமே வரவேற்கும்.
ஒவ்வொரு போர் நிறுத்தத்தின் போதும், மறுபக்கம் அமைதியாகவும் மரியாதையுடனும் இருக்கும். இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முடிவுக்கு வருவதற்கான சகிப்புத்தன்மை, தைரியம் பெற்றதற்கு நான் வாழ்த்த விரும்புகிறேன். அதை "12 நாள் போர்" என்று அழைக்க வேண்டும். இது பல வருடங்களாக நீடித்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர். ஆனால் அது நடக்கவில்லை. மத்திய கிழக்கு ஒருபோதும் அழியாது" என்று பதிவிட்டுள்ளார்.