For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நெல் கொள்முதல் மையங்களில் கையூட்டா? - விவசாயிகள் புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு கேட்டால், புகார் அளிப்பதற்கான வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
08:51 PM Feb 16, 2025 IST | Web Editor
நெல் கொள்முதல் மையங்களில் கையூட்டா    விவசாயிகள் புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு
Advertisement

நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளுக்கு விவசாயிகளிடம் கையூட்டு கேட்டால், புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைப்படியும்,  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரின் அறிவுரையின்படியும் மாநிலம் முழுவதும் நெல் பயிரிடும் விவசாயிகளின் நலன் கருதி 2600-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றிற்கு சுமார் 12800 எண்ணிக்கையிலான விவசாயிகளிடமிருந்து சுமார் 60,000 மெ.டன் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்குண்டான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மிண்ணனு பரிவர்த்தனை மூலம் நேரடியாக வரவு வைக்கப்பட்டு, நெல் நகர்வு செய்யப்பட்டு வருகிறது.

சில நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளுக்கு கையூட்டு வாங்குவதாக புகார்கள் வருகின்ற காரணத்தினால் நுகர்பொருள் வாணிபக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

1. சென்னை தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக் கூடிய 18005993540 என்ற எண்ணுடன் இயங்கி வரும் உழவர் உதவி மையம் இலவச தொலைபேசியில் புகார்களைத் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

2. மேலும், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மண்டல மேலாளர் / முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்ட அலைபேசி எண்களும் விவசாயிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த அலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு விவசாயிகள் புகார்களை தெரிவிக்கலாம்.

3. இத்தகைய புகார்களை தடுத்திடும் விதமாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கூடுதல் பதிவாளர் நிலையில் பிரத்யேக கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் தரக்கட்டுப்பாடு அலுவலர் ஒருவரும் மற்றுமொரு கண்காணிப்பு அலுவலரும் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது எழும் புகார்களின் அடிப்படையில் உடனுக்குடன் தொடர்புடைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று உரிய விசாரணையினை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜனவரி 2025 முதல் இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில், கறம்பக்குடி மற்றும் விலாப்படி ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் இலுப்பைவிடுதி ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் பணியாற்றும் பணியாளர்கள் கையூட்டு பெறுவதாக வந்த புகார்களையடுத்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

4. தற்காலிக / பருவகால பணியாளர்களை பொறுத்தவரையில் எழும் புகார்களின் மீது உண்மைத் தன்மை கண்டறியப்பட்டால் அவர்கள் உடனுக்குடன் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். நிரந்தரப் பணியாளர்களை பொறுத்தவரையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி மேல்நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

5. எனவே, மாநிலம் முழுவதுமுள்ள நெல் பயிரிடும் விவசாயிகள் யாருக்கும் கையூட்டு கொடுக்கவேண்டியதில்லை. புகார்கள் இருக்கும் பட்சத்தில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள எண்களுக்கு Whatsapp மூலமாகவோ அல்லது நேரில் தொடர்புகொண்டோ புகார்களை தெரிவிக்கலாம்.

6. மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்களின் அலைபேசி எண்ணான 9445257000-க்கு Whatsapp செய்தியாக மட்டும் புகார்களை அளிக்கலாம். புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்களோ அல்லது காணொளியோ இருந்தால் அதனையும் பதிவிடலாம்”

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement