தவெக தனித்துப் போட்டியிடுவது திமுகவிற்கு சவாலா? - கனிமொழி எம்.பி. பேட்டி
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்.பி.யும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
"முதலமைச்சர் மீது மிகப்பெரிய நம்பிக்கையோடு 'ஓரணியில் தமிழ்நாடு' திட்டத்தில் மக்கள் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர். தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுவது திமுகவிற்கு சவாலாக இருக்காது. அதிமுக, தவெக இடையே சவாலாக இருக்கலாம். நிறைய பேர் தனித்து போட்டியிடலாம் அது அவர்கள் தனிப்பட்ட முடிவு. தனித்துப் போட்டியிடுவோம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்திருப்பதற்கு வாழ்த்துகள்.
ஆனால் வெற்றி என்பது நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு தான் என்பது மக்களின் வரவேற்பை பார்க்கும் போது தெரிகிறது. திமுக கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார். முதலமைச்சரை ஏற்றுக்கொண்டு வரக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் நம்மோடு இணைந்து பணியாற்றலாம். அவர்களின் பக்கத்தில் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அதிமுகவை யாரும் கபளிகரம் செய்ய முடியாது என இபிஎஸ் கூறியிருப்பார்.
பாஜக உடன் கூட்டணி கிடையாது என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தெளிவுபடுத்தியது சில பேருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் மக்களுடைய எதிரிகள் யார்? என்பதில் மக்கள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் யாரை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். மக்கள், திமுக மீது முதலமைச்சர் மீது மிகப்பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஓரணியில் தமிழகம் என்பதில் மக்கள் ஆர்வமாக இருப்பது வரக்கூடிய தேர்தல்களின் முடிவுகளின் அறிகுறியாக பார்க்கலாம்"
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.