ராஜிநாமா உறுதி?... செந்தில் பாலாஜிக்கு பதில் மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்ததும், சட்டம் முன்பதிவு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ள சாராயக்காரர்கள், கணினி வெளி சட்ட குற்றவாளிகள், பாலியல் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள திருத்தச் சட்டம் முன் வடிவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய இருப்பதாக இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், இந்த சட்ட திருத்த சட்டம் முன் வடிவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்ததால், தமிழக அமைச்சரவையில் சர்ச்சை எழுந்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தது.
இந்நிலையில் ஜாமினா? அமைச்சர் பதவியா? என்பதை முடிவெடுத்து, செந்தில்பாலாஜி திங்கள் கிழமைக்குள் தெரிவிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே, அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜிநாமா செய்வதாக தகவல் வெளியான நிலையில், இன்று செந்தில் பாலாஜி தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த சட்ட முன் வடிவை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்திருப்பதன் மூலம், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜிநாமா செய்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.