ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் : சென்னையில் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து!
ஈரான் - இஸ்ரேல் இடையே வான் தாக்குதல் நடைபெற்று வரும் சூழலில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் நேற்று முன்தினம் தாக்குதலில் இணைந்தது. இதனால் கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி, ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது. இதை அடுத்து கத்தார், ஐக்கிய அமீரகம், பக்ரைன் நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுவதுமாக மூடி உள்ளன.
இதனால் மத்திய கிழக்கில் வான்வழிப் பகுதிகள் மூடப்பட்டதை அடுத்து, விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கத்தார் நாட்டை தலைமையகமாக வைத்து இயங்கிக் கொண்டு இருக்கும்
கத்தார் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மறு உத்தரவு வரும் வரை, தங்களுடைய அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து மத்திய கிழக்கு பகுதிகளுக்கு செல்லக்கூடிய 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள் மற்றும் 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், போர் பதற்றம் காரணமாக தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.