திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சுகுமார் பொறுப்பேற்றார்!
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றி வந்த கார்த்திகேயன்
எல்காட் நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இரா.சுகுமார்
நியமிக்கப்பட்டார். அவர் இன்று மாவட்ட ஆட்சியராக முறைப்படி
பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தொன்மை, வரலாறு, வீரம், கலை, இலக்கியம் என பல்வேறு நிலைகளில் தனித்துவத்துடன் சிறந்து விளங்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு அளித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி.
மக்கள் நலத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதோடு அரசின் சிறப்பு திட்டங்களான தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமைத்தொகை, இல்லம் தேடி மருத்துவம், உள்ளிட்ட சிறப்பு திட்டங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் நலனிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மாவட்டத்தில் ஒவ்வொரு துறைகளின் சார்பில் நடந்து வரும் திட்ட பணிகளில் தாமதம் ஆனால் அவற்றில் கள ஆய்வு மேற்கொண்டு, அந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தாமிரபரணி நதியை சுத்தம் செய்வது என்பது ஒரு சவால் நிறைந்த பணியாகும். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் வழிகாட்டுதலோடு அந்தப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் அதிக அளவு கால்நடைகள் உள்ளதால் பால் வளத்தை பெருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்” என தெரிவித்தார் .