ஐபிஎல் 2025 | கோப்பையை கைப்பற்றியது பெங்களூரு அணி - பஞ்சாப்பை வீழ்த்தி திரில் வெற்றி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று (ஜுன்.03) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், தொடக்க வீரர்களாக விராட் கோலி ஃபில் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஃபில் சால்ட் 16 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து மயங்க் அகர்வால் 24 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். நீண்ட நேரம் களத்தில் நின்ற விராட் கோலி 35 பந்துகளுக்கு 43 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து ரஜத் படிதார் 26 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 25 ரன்களும், ஜிதேஷ் சர்மா 24 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்தவர்கள் இவர்களுக்கும் குறைவாகவே ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 190 ரன்கள் அடித்தது.
பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கைல் ஜேமிசன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். மேலும் அஸ்மதுல்லா உமர்சாய், வைஷாக் விஜய் குமார், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து 191 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது.
பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் இறங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா 24 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும் அவுட் ஆனார்கள். தொடர்ந்து களத்திற்கு வந்த இங்கிலிஸ் அதிரடியாக ஆடினார்.
தொடர்ந்து இளம் வீரர்களான நேஹல் வதேரா மற்றும் ஷஷாங் சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் வதேரா 15 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 6 ரன்னிலும், ஓமர்சாய் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.