பிப்.1ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் - இன்று கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம்.!
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில் இன்று அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன.
மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ந் தேதி தொடங்கும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு அல்வா வழங்கு நிகழ்வு நடைபெறும். அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக அல்வா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அல்வா வழங்கினார். இந்த கூட்டத் தொடர் தற்போதைய 17-வது மக்களவையின் இறுதி கூட்டத் தொடராகும்.
மேலும் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனவரி 31-ந் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரைக்கு பின்னர் கூட்டத்தொடர் தொடங்கும். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். இக்கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த வலியுறுத்தி இன்று மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.