இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.944 கோடி அபராதம் - வருமான வரித்துறை நோட்டீஸ்!
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான 'இண்டிகோ' நிறுவனத்திற்கு வருமான வரித்துறை ரூ.944 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கான நோட்டீசை, இண்டிகோவின் தாய் நிறுவனமான இண்டர் குளோப் விமான நிறுவனம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2021- 2022ம் ஆண்டு வருமான வரி பிரச்னை தொடர்பான, வருமான வரித்துறை கமிஷனரிடம் செய்யப்பட்ட முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், அந்த முறையீடு இன்னும் விசாரணையில் தான் உள்ளது, இதில் எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து சட்ட ரீதியாக போராடுவோம். இந்த நடவடிக்கையால் நிறுவனத்தின் நிதி, இயக்கம் அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், 25ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் தங்களின் நிகர லாபம் 18.6 சதவீதம் குறைந்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் கூறியிருந்தது. செலவுகள் உயர்வு காரணமாக லாபம் குறைந்ததற்கான காரணம் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.