For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இந்தியாவின் விசிலிங் வில்லேஜ்" - ஓர் இசை கிராமத்தின் அதிசய வரலாறு!

06:20 PM Aug 03, 2024 IST | Web Editor
 இந்தியாவின் விசிலிங் வில்லேஜ்    ஓர் இசை கிராமத்தின் அதிசய வரலாறு
Advertisement

இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள "விசிலிங் வில்லேஜ்"  என்று ஓர் இசை கிராமத்தின் அதிசய வரலாற்றை இந்த தொகுப்பில் காணலாம்.

Advertisement

வளர் இளம் பருவத்தை சார்ந்த இருபாலரும் விசில் அடிக்க கற்றுக் கொண்டதை சாதனையாக கருதுவதுண்டு. அதேவேளையில் கிராமங்களில் விசில் அடிப்பதை தவறு என பாட்டிகள் கண்டிப்பதும் உண்டு. ஆனால், இங்கு ஓரு கிராமத்தில் பிறரை அழைப்பதற்காக விசில் அடிப்பார்கள் என்றால், நம்பமுடிகிறதா?...ஆனால், அதுதான் உண்மையும் கூட.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது காங்தாங் என்கிற கிராமம். இந்த கிராமம் “விசிலிங் வில்லேஜ்” என்று பரவலாக அறியப்படுகிறது. மலைகள் சூழ அமைந்துள்ள இந்த கிராமத்தில் கிளிகளின் கீச்சலை போலவே அங்கு வசித்து வரும் மக்களின் பெயர்களும் உள்ளது.

பொதுவாக, ஒரு நிலத்தின் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளின் வைக்கப்பட்டுள்ள பெயர்களும், உச்சரிப்புகளும் இடம்பெறுகின்றன. சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில் வைக்கப்பட்டுள்ள பெயர்கள் நமக்கு சிரிப்பை ஏற்படுத்தும். இதேபோல இந்தியாவில் வைக்கப்படும் பெயர்களை பல வெளிநாட்டினர் உச்சரிக்க சிரமப்படுவதையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில், மேகாலயாவில் உள்ள இந்த காங்தாங் கிராமத்தில் தாய், தந்தை, குழந்தைகள் மற்றும் உறவினர் உள்ளிட்ட அனைவருமே ஒருவருக்கொருவர் விசில் சத்தம் மூலமாகவே அழைத்துகொள்கின்றனர். அவர்களின் உரையாடலும் பெரும்பாலும் இசை வடிவிலேயே இருக்கிறது. இதைபோல தமிழ் சினிமாவிலும் ஒரிரு திரைப்படங்களில் காட்சிகள் அமைந்திருக்கும்.

குறிப்பாக, 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படக் காட்சி நினைவிருக்கிறதா? கதையின் நாயகர்களை அறிமுகப்படுத்தும் காட்சியில், சூர்யா, ஜோதிகா அவர்களது குழந்தை என மூவரும் விசிலடித்துக்கொண்டு தான் பேசிக்கொள்வார்கள். இதைபோல, நடிகர் ஜெயம்ரவியின் 'பேராண்மை'திரைப்படத்திலும் சில காட்சிகள் அமைந்திருக்கும். அப்படி தான் இந்த கிராமத்தில் இருப்பவர்களும் பேசிக் கொள்வார்களாம். பெயர் சொல்லி ஒருவரை ஒருவர் கூப்பிட்டுக் கொள்வதே இங்கு அரிது தானாம்.

பழங்குடியினர் வசித்து வரும் இந்த கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், குழந்தையின் தாய் பெயரோடு சேர்த்து ஒரு இசையையும் பெயராக சூட்டுவார். மேலும், இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு இரண்டு பெயர்கள் இருக்கும். அதில் ஒன்று வழக்கமாக நமக்கு வைக்கப்படும் பெயர்கள், மற்றொன்று இசைப் பெயர். இந்த இசைப்பெயரிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒரு ஷார்ட் சாங், மற்றொன்று லாங் சாங். இந்த ஷார்ட் சாங் வீட்டிலிருப்பவர்கள் அழைப்பதற்காக, லாங் சாங் ஊரார் பயன்பாட்டிற்காகவாம்.

இந்த இசையை இவர்கள் ’ஜிங்கர்வை லாபெய்’ என்று அழைக்கிறார்கள். இது ’அம்மாவின் அன்பு பாடல்’ என்று பொருள்படுகிறது. ஒரு மனிதர் இறக்கும்போது அந்த இசைக்குறிப்பும் அழிந்துவிடும், அந்த இசை வேறு எவருக்கும் பெயராக சூட்டப்படுவதில்லை. பல தலைமுறைகளாகவே இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருவதாக கூறும் கிராமவாசிகள், இது எப்போது என்ன காரணத்திற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியவில்லை, ஆனால் இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது எனக் கூறுகின்றனர்.

சிறந்த சுற்றுலா கிராம விருதை கடந்த 2022ம் ஆண்டு சுற்றுலா அமைச்சகம் காங்தாங் கிராமத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. வயல்வெளிகளில், காடுகளில் வேலைபார்க்கும்போது பொதுமக்கள் அசதி தெரியாமல் இருக்க பாட்டு பாடுவது வழக்கம். ஆனால் இந்த கிராமத்தில் இருப்பவர்கள் இயல்பாக பேசிக்கொள்வதே பாட்டுபாடி தான் என்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • அ.சௌமியா
Tags :
Advertisement