For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியாவின் புகழ்பெற்ற வனவிலங்கு பாதுகாவலர் வால்மிக் தாப்பர் காலமானார்!

இந்தியாவின் புகழ்பெற்ற வனவிலங்கு பாதுகாவலர் வால்மிக் தாப்பர் இன்று(மே.31) காலமானார்.
09:04 PM May 31, 2025 IST | Web Editor
இந்தியாவின் புகழ்பெற்ற வனவிலங்கு பாதுகாவலர் வால்மிக் தாப்பர் இன்று(மே.31) காலமானார்.
இந்தியாவின் புகழ்பெற்ற வனவிலங்கு பாதுகாவலர் வால்மிக் தாப்பர் காலமானார்
Advertisement

இந்தியாவின் புகழ்பெற்ற இயற்கையாளர், காட்டுயிர் செயல்பாட்டாளர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர் வால்மிக் தாபர்(வயது.73) இன்று காலமானார். அண்மையில் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்த நிலையில், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மறைந்தார்.

Advertisement

வால்மிக் தாபர்... 1952ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். இவரது தந்தை ரமேஷ் தாபர் ஒரு பத்திரிகையாளர் . பிரபல வரலாற்றாளர் ரோமிலா தாபர் இவரது அத்தை ஆவார். 1976 ஆம் ஆண்டு ரண்தம்போர் புலிகள் காப்பகத்தின் அன்றைய கள இயக்குனர் ஃபதே சிங் ரதோர் உடனான சந்திப்பு இவரை காட்டுயிர்கள் பாதுகாப்பின் பக்கம் திசை திருப்பியது. அந்த சந்திப்பே புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் குறித்த வால்மிக் தாபரின் வாழ்நாள் பேரார்வத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

கடந்த 50 ஆண்டுகளாக புலிகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் பாதுகாப்பிற்காக தொடர்ந்து செயலாற்றி வந்துள்ளார். புலிகளுடன் வாழ்தல்
(Living with Tigers), புலிகளின் அந்தரங்க வாழ்வு (The Secret Life of Tigers), புலி கனல்: இந்தியாவில் புலிகளின் ஐந்நூறு ஆண்டு வரலாறு (Tiger Fire: 500 Years of the Tiger in India) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

அறிவியல் தகவல்களை கதை வடிவில் உணர்வு பூர்வமாக தரும் ஆற்றல் மிக்க எழுத்து வல்லமை கொண்டவர். இவர் தயாரித்த காட்டுயிர்கள் பற்றிய ஆவணப் படங்கள் மிகவும் புகழ்பெற்றவை. அவற்றில் பல BBC, National Geographic, Discovery போன்ற பன்னாட்டு ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டவை. 1997ஆம் ஆண்டு வெளியான 'புலிகளின் நிலம்' (Land of the Tiger) எனும் ஆவணப்படம் பெரிதும் பாராட்டப்பட்டது.

வால்மிக் தாபர் மத்திய மற்றும் மாநில அளவில் 150-க்கும் மேற்பட்ட அரசுக் குழுக்களில் பணியாற்றி உள்ளார். தேசிய வனஉயிரின வாரியம், வட இந்தியாவில் சரிஸ்கா உள்ளிட்ட சில புலிகள் காப்பகங்களில் புலிகளே இல்லாமல் போன சூழலில் அமைக்கப்பட்ட புலிகளுக்கான விரைவு பணிக்குழு (Tiger Task Force ) ஆகியவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார்.

"பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின்" ( IUCN) பூனை வகை விலங்குகளின் சிறப்பு குழு (Cat Specialist Group) , இந்திய உயர் நீதிமன்றம் அமைத்த
மத்திய உயர்மட்ட குழு ( Central Empowered Committee) போன்றவற்றிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். இவரால் 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரண்தம்போர் அறக்கட்டளை (Ranthambhore Foundation) எனும் அமைப்பின் மூலம் உள்ளூர்
மக்களின் பங்களிப்போடு கானக பாதுகாப்பிற்காக பெண்கள்
கூட்டுறவு சங்கம், எழுத்தறிவு இயக்கம் போன்ற செயல்பாடுகள் தொடங்கப்பட்டன.

அரசால் அமைக்கப்பட்ட குழுக்களில் இடம்பெற்று இருந்தாலும் அரசின் கொள்கை முடிவுகளில் இருந்த குறைபாடுகள், நிர்வாகத் தவறுகள் ஆகியவற்றைத் தயக்கமின்றி விமர்சிக்கும் நேர்மையும் துணிவும் கொண்டிருந்தவர். "தோட்டாக்களால் கொல்லப்பட்டதைக் காட்டிலும் அரசு நிர்வாகக் குறைபாடுகளால் கொல்லப்பட்ட புலிகளே அதிகம்" (bureaucracy killed more tigers than bullets ever did) என்பது இவரது புகழ்பெற்ற கூற்று.

புலிகளுக்காகவும் ஏனைய காட்டுயிர்களுக்காகவும் 50 ஆண்டுகள் ஓயாது ஒலித்த குரல் இன்று மீளா ஓய்விற்கு சென்றுவிட்டது. எனினும் இந்தியக் காடுகளில் ஒலிக்கும் ஒவ்வொரு புலியின் உறுமலிலும் அவரின் குரலை உணர முடியும்.
அவரின் நூல்கள், ஆவணப் படங்கள், அவரால் உருவாக்கப்பட்ட மனிதர்கள், செயல்பாடுகள் இதன் மூலம் நம்மோடு பேசிக் கொண்டே இருப்பார்.

Tags :
Advertisement