For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா!

02:34 PM Feb 26, 2024 IST | Web Editor
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.  இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி பிப்.23-ம் தேதி ராஞ்சியில் தொடங்கியது.  இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 302 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்தது.  அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  ஜோ ரூட் மற்றும் ஒல்லி ராபின்சன் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

பிப்.24 ஆம் தேதி 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது.  அரைசதம் கடந்த ராபின்சன் 58 ரன்னில் கேட்சானார்.  அடுத்துவந்த பஷீர், ஆண்டர்சன் ஆகியோர் ‘டக் அவுட்’ ஆக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.  ஜோ ரூட் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை துவக்கியது.  ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  பிறகு சுப்மன் கில் 38, படிடர் 17,  ஜடேஜா 12,  சர்பராஸ் கான் 14 ,  அஸ்வின் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.  துவக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால்,  இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி 73 ரன்களுக்கு போல்டானார்.  2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.  இங்கிலாந்து சார்பில் பஷீர் 4 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்தனர்.  இதில் குல்தீப் யாதவ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அடுத்து ஆகாஷ் தீப் களமிறங்கினார்.  ஆனால், அவருக்கு அதிக ஸ்டிரைக் கொடுக்காமல் விளையாடிய துருவ் ஜூரெல் 90 ரன்கள் எடுத்தார்.

துருவ் ஜூரெலின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது இந்திய அணி.  இதன் மூலம் இந்திய அணி, இங்கிலாந்தை விட 46 ரன்கள் பின்னிலையில் இருந்தது.  இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட், டாம் ஹார்ட்லி 3 விக்கெட், ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதன்பின் இங்கிலாந்து அணி களமிறங்கியது.  தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்கள் அடித்தார்.  பேர்ஸ்டோவ் 30 ரன்கள் எடுத்தார்.  மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி சார்பில் அஸ்வின் 5 விக்கெட்,  குல்தீப் யாதவ் 4 விக்கெட்,  ஜடேஜா 1 விக்கெட் கைப்பற்றினர்.  இதனால் இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு  நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 40 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.  தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 192 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.  அதிகபட்சமாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 55 ரன்களும்,  சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 52 ரன்களும் எடுத்திருந்தனர்.  இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

Tags :
Advertisement