ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டியை அமெரிக்காவுக்கு அனுப்பும் இந்தியா!
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூன்.12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 போயிங் 787-8 வகை பணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமான விழுந்த பிஜே மருத்துவ மாணவர்கள் விடுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் விமானத்தில் பயணித்தவர்கள் என மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர்.
இதில் அவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், டிஎன்ஏ சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது. உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியும் ஒப்பிட்டு பார்த்து சோதனை செய்தனர். இதுவரை 210 பேர் உடல்களின் டிஎன்ஏ மாதிரிகள் பொருந்தி இருந்ததால், அந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில், 187 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்துவதற்காக, இந்திய அதிகாரிகள் விபத்துக்குள்ளான போயிங் 787 விமானத்தின் சேதமடைந்த கருப்புப் பெட்டியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியத்திற்கு (NTSB) அனுப்ப உள்ளனர். கருப்பு பெட்டிக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்ட சேதத்தால், டிஜிட்டல் ரெகார்டிங் தரவை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என இந்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரவுகளை பெற அமெரிக்கா அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.