"பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்" - மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் தகவல்!
மக்களவையில் நேற்று (மார்ச் 25) மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் பேசினார். அப்போது, "பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் (RGM) திட்டத்தை தொடங்கியதிலிருந்து, நாட்டில் பால் உற்பத்தி 63.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இதை 15 சதவீதம் அதிகரிக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
உலகில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போதைய 239 மில்லியன் மெட்ரிக் டன்னில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் 300 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். நாட்டில் சுமார் 10 கோடி பேர் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர், அதில் 75 சதவீதம் பேர் பெண்கள். இந்தியாவில் தனிநபர் பால் நுகர்வு 471 கிராம் ஆகும்.
ராஷ்டிரீய கோகுல் மிஷனின் நோக்கம், உள்நாட்டு கால்நடை இனங்களை பராமரித்து மேம்படுத்துவதுடன், பசுக்களின் பால் உற்பத்தி திறனை அதிகரித்து, பால் உற்பத்தியை உயர்த்துவது ஆகும். இதன்மூலம், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக இதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 2021-2022 முதல் 2025-2026 வரை துறையின் திருத்தப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட திட்டங்களின் கீழ் தொடர்கிறது. இனப்பெருக்க வலையமைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், விவசாயிகளின் வீட்டு வாசலில் செயற்கை கருவூட்டல் சேவைகளை வழங்குவதன் மூலமும் செயற்கை கருவூட்டல் கவரேஜை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.