இந்தியா - பாகிஸ்தான் போர் : பஞ்சாப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் வீரியமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கைகளை இரு நாடுகளும் முன்னெடுத்து வருகிறது. இதனிடையே பாதுகாப்பு காரணமாக ஜம்மு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரில் முழு உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போர் காரணமாக ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இந்நிலையில், முன் எச்சரிக்கை காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு 3 நாட்கள் மூடப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பஞ்சாப்பில் அனைத்து காவல் அதிகாரிகளுக்குமான விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள 5 மேற்கு மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஹரியானாவில் பஞ்ச்குலாவில் பள்ளிகள் மூடல் உட்பட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஊழியர்களின் விடுமுறைகளையும் அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.