"பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க பாரதம் உறுதியாக உள்ளது" - உள்துறை அமைச்சர் அமித் ஷா!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"இந்திய ராணுவத்தை எண்ணி பெருமை அடைகிறோம். பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர். இந்தியா மற்றும் இந்திய மக்கள் மீதான எந்தநொரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேரில் இருந்து அழிப்பதற்கு பாரதம் உறுதியாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.