நியூஸிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை தட்டிச் சென்ற இந்தியா!
9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையே இன்று(மார்ச்.09) நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்ததது. நியூஸி. அணியின் தொடக்க வீரர்களாக வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர். இதில் வில் யங் 15 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக கேன் வில்லியம்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ரச்சின் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அவருக்கடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் நிதானமாக விளையாடி 63 ரன்கள் குவித்தார். இதனிடையே டாம் லதாம் 14 ரன்களில் அவுட்டானர். இதையடுத்து வந்த மைக்கேல் பிரெஸ்வெல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை அடித்து, இந்தியாவுக்கு 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய அணி சார்பில் வருண் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தங்களது சுழலில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டகாரர்களான ரோஹித் சர்மா 79 ரன்களும், சுப்மன் கில் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்பு களமிறங்கிய விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் இணைந்து நிதானமாக ஆடி, ஸ்ரேயாஸ் 48 ரன்களும், அக்சர் 29 ரன்களும் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 18 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 34 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இவருடன் இறுதியாக பார்ட்னர்ஷிப்பில் இணைந்த ஜடேஜா பவுன்டரி அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். நியூஸிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதனை படைத்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மழை காரணமாக நிறுத்தப்பட்டு, இரு அணிகளுக்கும் கோப்பை பகிரப்பட்டது. அதன் பின்பு தோனி தலைமையில் இந்திய அணி 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இதையடுத்து தற்போது ரோஹித் தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.