இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டி பாதியில் நிறுத்தம்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, மெல்போர்னில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கான்பெர்ராவில் நடந்த 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், கோல்டுகோஸ்டில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருந்தபோது, திடீரென மைதானம் சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் மின்னல் அடித்தது. இதனால், மோசமான வானிலை மற்றும் வீரர்களின் பாதுகாப்பு கருதி ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.