‘நூர் கான்’ உட்பட 3 விமான தளங்களை தாக்கிய இந்தியா... வான்வெளி எல்லைகளை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!
கடந்த ஏப்.22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என இந்திய பாதுகாப்பு படை தெரிவித்தது. ஆனால் இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்ததாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இது இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றத்தை அதிகரித்தது.
இச்சூழலில் கடந்த இரண்டு நாட்களாக இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள “நூர் கான்” விமான தளத்தை இந்தியா தாக்கியது. இந்த விமான தளத்தில்தான் பாகிஸ்தான் ராணுவத்துக்கான பல்வேறு உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.
போர் விமானங்களுக்கு வான்வெளியிலேயே எரிபொருள் நிரப்பவும், ராணுவ தளவாடங்களை ஏற்றி செல்லும் விமானமான (ilyushin il-76) "இல்யூஷின் இல்-76" மற்றும் "ஹெர்குலஸ் C-130E" விமானமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தளம் ஆகும். அதேபோல பாகிஸ்தானின் மூரிட் விமானத்தளம் ஷார்கோட் கோட் விமான தளத்தையும் இந்திய ஏவுகணைகள் தாக்கின.
மூன்று விமான தளங்களை இந்தியா தாக்கியத்தை தொடர்ந்து பாகிஸ்தானின் வான்வெளி எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டன. இந்திய விமான தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை முடுக்கிவிட்ட பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானின் விமானத்தளங்களை தாக்கியுள்ளது.