"40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்" - கனிமொழி பேட்டி!
40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே போன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி வேட்பாளரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பள்ளியில் வாக்களித்தார். பின்னர் அவர் தூத்துக்குடி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசும் போது, "மின்னணு வாக்குப்பது இயந்திரத்தின் மீதான சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் அல்லது பழைய முறைப்படி வாக்குசீட்டு முறையை கொண்டு வர வேண்டும். நிச்சயமாக மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.