டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் ராகுல்காந்தி தலைமையில் இன்று பேரணி!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில், கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப் பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், மக்களவைத் தோ்தல் மோசடியைக் கண்டித்து, பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம் நடத்தியது. இந்த குற்றச் சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம் ராகுல் காட்டிய ஆவணங்கள் மேற்கண்ட தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்டதல்ல என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 பேர், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாக சென்று, தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பேரணி காலை 11:30 மணிக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ”வாக்குகள் திருடப்படுவது என்பது ஒரு நபருக்கு ஒரு ஓட்டு என்ற அடிப்படை கருத்தியலுக்கே எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளார்.