திருநெல்வேலியில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ.58.14 லட்சம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி!
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கும், கால்நடை இழந்தவர்களுக்கும் முதற்கட்ட நிவாரண நிதியாக 21 பயனாளிகளுக்கு ரூ.58.14 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியும், மின்சாரம் தாக்கியும் மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்தும், கால்நடைகளை இழந்தும் தவித்து வருகின்றனர். கனமழையின் வெள்ளத்தால், திருநெல்வேலி மாவட்டத்தில் 16 நபர்கள் இறந்துள்ளனர். 67 மாடுகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன. 1064 வீடுகள் மழையால் இடிந்து விழுந்துள்ளன. 135 கன்றுகுட்டுகள் இறந்துள்ளன. 28,392 கோழிகள் இறந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு
- உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 இலட்சம்
- மாடுகள் இழந்தவர்களுக்கு தலா ரூ.37,500
- வீடுகள் இழந்தவர்களுக்கு தலா ரூ.10,000
- ஆடுகள் இழந்தவர்களுக்கு தலா ரூ.4000
- கன்றுகள் இழந்தவர்களுக்கு தலா ரூ.20,000
- கோழிகள் இழந்தவர்களுக்கு தலா ரூ.100
வீதம் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சில பகுதிளுக்கு நிவாரண தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் இன்று வழங்கப்பட்டது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மழை வெள்ளத்தில் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கும், வீடு இழந்த 5 நபர்களுக்கும், மாடு, ஆடு, கோழி இழந்த 5 உரிமையாளர்கள் என மொத்தம் 21 நபர்களுக்கு ரூ.58 இலட்சத்து 14 ஆயிரம் நிவாரணத்தொகையினை முதற்கட்டமாக வழங்கியுள்ளார்.