“அன்புமணி மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சிதான்... ஆனால் இதனை செய்யவேண்டும்” - எம்எல்ஏ அருள்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்,
2026 சட்மன்ற தேர்தலில் பாமக மிகப்பெரிய சக்தியாக இருக்கும். 40 தொகுதிகளில் வென்றெடுக்க வேண்டுமென கூட்டத்தில் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சி ராமதாசும், அன்புமணி ராமதாசும் இணையும் செய்தி கேட்கும் நாள் தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல் பாமகவினருக்கு இருக்கும். 2026 தேர்தலில் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக பாமக இருக்கும்.
அன்புமணி மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் மருத்துவர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் தைலாபுரத்தில் சந்தித்து சமாதானம் ஆகிவிட்டதாக தெரிவிக்கும் நாளுக்காக காத்து கொண்டு இருக்கிறோம்.” என தெரிவித்தார்.