நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே... காதலிக்காக பெண் வேடமணிந்து போட்டித்தேர்வு எழுத சென்ற காதலன்...
காதலிக்காக பெண் வேடம் அணிந்து போலி ஆவணங்களை உருவாக்கி போட்டித் தேர்வு எழுத சென்ற காதலன் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜன. 7-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. டிஏவி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற இந்த தேர்வில், பரம்ஜித் கவுர் என்ற பெண்ணிற்கு பதிலாக சிவப்பு நிற வளையல்கள், உதட்டுச் சாயம் மற்றும் பெண்களின் உடையில் வந்தவரை தேர்வு அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
அவரிடம் அடையாள அட்டை இருந்ததால் அவர்மீது யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. இந்த தேர்வுகள் முழுவதும் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் அனைவரும் தங்களது விரல் ரேகைகளை பதிவு செய்யவேண்டும். அப்போது பரம்ஜித்தின் கை ரேகை பொருந்தாததால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை விசாரணை செய்தனர். அப்போது அவர் பெண் அல்ல, ஒரு ஆண் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து உடனடியாக அவரைப் பிடித்த அதிகாரிகள், போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் அங்ரேஷ் சிங் என்பதும், அவர் பரம்ஜித் கவுரின் காதலன் என்பதும் தெரிய வந்தது.