"தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி" - பிரேமலதா விஜயகாந்த்!
தமிழ்நாடு முழுவதும் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்னும் பிரச்சார பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார். மேலும் கேப்டனின் ரத யாத்திரை, மக்களைத் தேடி மக்கள் தலைவர் என்னும் பெயர்களில் இந்த பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி, மாளிகை மேடு, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார்.
அப்போது பண்ருட்டி பேருந்து நிலையப் பகுதிகளில் பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், "மக்களுக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் அதனை எதிர்த்து மக்களுடன் தேமுதிக தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் விஜயகாந்த்தை அண்ணன் என குறிப்பிட்ட நிலையில் விஜய் எங்களுக்கு தம்பி, அரசியலுக்கு வந்ததற்கு பிறகு வந்ததல்ல இந்த அண்ணன் தம்பி உறவு, கேப்டன் விஜயகாந்த் திரைத்துறையில் வந்ததில் இருந்து இந்த உறவு தொடர்கிறது என்றார்.
மேலும் தேமுதிக தற்பொழுது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என தெரிவித்த அவர், ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.