“Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், பரிதாபங்களை கூட்டியுள்ளனர்” - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துவரும் நிலையில், பெட்டிகளை குறைத்துள்ள சம்பவம் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் நிற்பதற்குகூட இடமில்லாத காரணத்தால், முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டை வாங்கும் பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் நின்றுகொண்டும், வழியில் அமர்ந்தும் பயணம் செய்து வருகிறார்கள். கடந்த சில நாள்களாக பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் இடமில்லாததால் அதிகளவிலான பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர்.
இதனிடையே, முன்பதிவு மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணிப்பவர்கள் கூட்டத்துக்கு அஞ்சி கதவுகளை மூடிக் கொள்கின்றனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் ரயில்களை சேதப்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில், 26 ரயில்களின் (இரு வழித்தடத்தில்) முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு மாற்றாக மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டிகளை இணைக்கவுள்ளதாக பிப். 15ஆம் தேதி தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இன்றுமுதல் அமலுக்கும் வந்துள்ளது.
சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகள் இன்றுமுதல் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட புதிய ரயில்வே கொள்கையின் அடிப்படையில், ஒரு ரயிலுக்கு அதிகபட்சமாக இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறைபடி குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்பட்டதன் விளைவாக இரவு நேரங்களில் முன்பதிவு பெட்டிகளில் அதிகளவிலான மக்கள் ஏற நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில்,
“சமூக வலைத்தளம் முழுக்க இரயில் #பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்!
அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.