”மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால் சேதம் உங்களுக்கு அதிகமாக இருக்கும்” - டிரம்ப்-க்கு ஈரான் தலைவர் கமெனி பதிலடி!
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு போர் பதற்றம் அதிகரித்து, மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்றுடன்(ஜூன்.18) இந்த போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 585 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே போருக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் “ ஈரான் தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் ஒரு எளிதான இலக்கு. நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு அல்ல. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது” என்று ஈரானிய உச்ச தலைவர் கமெனிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து சரணடைய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் கமெனி தனது எக்ஸ் பதிவில், “அமெரிக்க அதிபர் நம்மை அச்சுறுத்துகிறார். தனது அபத்தமான சொல்லாட்சியால், ஈரானிய மக்கள் தன்னிடம் சரணடைய வேண்டும் என்று அவர் பேசுகிறார். ஈரானிய நாடு இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சுவதில்லை” என்றார். அதன் பின்னர் ஒரு பதிவில், “ஈரானிய நாட்டை சரணடையச் சொல்வது புத்திசாலித்தனம் அல்ல. ஈரானிய நாடு எதற்கு சரணடைய வேண்டும்? யாருடைய தாக்குதல்களுக்கும் நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம். இதுதான் ஈரானிய நாட்டின் தர்க்கம். இதுதான் ஈரானிய நாட்டின் உணர்வு” என்றார்.
மற்றொரு பதிவில், இந்த போரில் அமெரிக்கா நுழைவது தனக்குத்தானே 100% தீங்கு விளைவிக்கும். என்றார். தொடர்ச்சியாக அடுத்த பதிவில் “இந்த மோதலில் அமெரிக்கா ராணுவ ரீதியாக தலையிட்டால், அவர்கள் சந்திக்கும் சேதம் நிச்சயமாக ஈடுசெய்ய முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.