“ரயில்வே போர்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” - நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் கண்டனம்!
ரயில்வே துறை தேர்வில் திருநெல்வேலியைச் சேர்ந்தவருக்கு கேரளாவில் தேர்வு மையம் ஏற்பாடு செய்ததற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராபர்ட் புரூஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை மறுநாள்(ஜூன்.23) ரயில்வே துறையில் வேலை வாய்ப்பிற்கான தேர்வு நடைபெறவிருக்கிறது. அதில் திருநெல்வேலி சந்திப்பு தச்சநல்லூரைச் சேர்ந்தவரும் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதில் அவரை தேர்வு எழுத கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்துள்ள வர்க்கலா ரயில் நிலையத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள அட்டிங்காலில் அமைந்துள்ள நெடும்பரம்பு பகுதியில் ராஜதானி இன்ஸ்டிடியூட் ஆப் இன்சினிரியரிங் கல்லூரியில் தேர்வு எழுதுவதற்கான அழைப்பு விடுத்துள்ளனர்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நெல்லை மாவட்டம் பரந்து விரிந்து இருக்கும் பெரிய மாவட்டம். தென்னகத்து ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டை பகுதியில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. மேலும் திருநெல்வேலியைச் சுற்றி ஏராளம் கலைக்கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும் உள்ள நிலையில் இவரைப் போன்றோரை வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத அழைத்திருப்பது மிகவும் துரதிருஷ்டமானதாகும். இத்தகைய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்பதோடு மிகவும் ஆட்சேபணைக்குரியதாகும்
இவ்வாறு செய்தால் தமிழ்நாடு மாணவ, மாணவிகளை தேர்வு எழுதாமல் செய்து விடலாம் என்று ரயில்வே போர்டு எண்ணுகிறதா? என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இவ்வாறு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு அவர்கள் சொந்த மாவட்டங்களிலேயே தேர்வு மையம் ஏற்படுத்திக் கொடுக்க ரயில்வே போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்குப் பிறகும் ரயில்வே போர்டு இவ்வாறு ஒருதலைபட்சமான முறையில் செயல்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதோடு உரிய நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்து ரயில்வே போர்டின் செயல்கள் தடுத்து நிறுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.