‘மகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், மன்னிப்பு வழங்கமாட்டேன்’ - ஜோ பைடன் அதிரடி!
மகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தனது அதிகாரத்தால் எந்தவித பொது மன்னிப்பும் வழங்கப்படாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்டு வரும் தனது மகன் வழக்கில், அவர் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை என்று ஹண்டரின் தந்தையும், அமெரிக்க அதிபருமான ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும், நான் அதிபராக இருந்தாலும் ஒரு தந்தையாக, எனது மகன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன். எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது. ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அனுமதி இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்களால் அதை வாங்க முடியாது.
இந்த நிலையில், துப்பாக்கி வாங்குவதற்கான படிவத்தில் ‘போதைப் பொருள் பழக்கம் கிடையாது’ என்று ஹன்டர் பைடன் பொய்யாகக் கூறியதாக அவர் மீது கடந்த சில நாள்களாக வழக்கு நடைபெற்றுவருகிறது.