"தை பிறந்தால் வழி பிறக்கும்" - தமிழ்நாடு முழுவதும் தை திருநாள் உற்சாகம்!
பண்பாட்டு அடையாளமாக திகழும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாள் இன்று வெகு விமரிசையாக உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர் திருநாளான தை மாதம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாளாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றன. தமிழர் கலாசாரத்தில் சிறந்த வரவேற்பை பெற்ற பொங்கல் திருநாள் இன்று நாடு முழுவதும் புது பானையில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் காலையிலேயே பெண்கள் தங்களது வீடுகளில் முன்பு வண்ண கோலங்கள் போட்டு பொங்கல் திருநாளை வரவேற்றனர். மக்கள் காலையிலேயே நீராடிவிட்டு புத்தாடை அணிந்து, அறுவடை செய்த அரிசி, காய்கறிகளை படையல் இட்டு புது பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்தனர்.
பொங்கல் பொங்கும் போது "பொங்கலோ பொங்கல்" என உற்சாக குரல் எழுப்பி மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமத்துவத்தை உணர்த்தும் விதமாக பொது இடங்களில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் புதுமண தம்பதியினர் தங்களது தலப்பொங்கல் கொண்டாடினர். சீர்வரிசையாக கொண்டுவரப்பட்ட பொருட்களைக் கொண்டு பொங்கலிட்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இதேபோல பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. அதில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு விளையாடி மகிழ்ந்தனர். கலை நிகழ்ச்சிகளில் அனைவரும் ஆடி, பாடி பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரையில் பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. ஆர்வமுடன் இருந்த ஏராளமான வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளரும், மாநில எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் பொங்கல் வாழ்த்துகளை மக்களுக்கு தெரிவித்தனர்.