For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பிரதமர் மோடி தமிழ் பேச ஆரம்பித்தால்...” - முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பதில்!

04:05 PM Mar 30, 2024 IST | Web Editor
“பிரதமர் மோடி தமிழ் பேச ஆரம்பித்தால்   ”   முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் எல் முருகன் பதில்
Advertisement

“பிரதமர் மோடி தமிழில் பேச ஆரம்பித்தால் தமிழ்நாட்டில் திமுகவிற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்” என முதலமைச்சரின் பதிவிற்கு நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணையமைச்சருமான எல். முருகன் பதிலளித்துள்ளார். 

Advertisement

பிரதமர் மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது என பிரதமர் மோடி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பாஜக வேட்பாளர் எல்.முருகன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

பிரதமர் நரேந்திர மோடி இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார்.  பிரதமர் மோடி தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற திமுக ஆட்சியாளர்களுக்கு,  மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என்பது தான் உண்மை.  இந்த உண்மையை,  இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாமானிய மக்களும் உணர்ந்துள்ளார்கள்.  அதன் விளைவே உங்களின் இந்த அறிக்கை என்பதையும் உணர்கிறேன்.  இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு அரும் பெரும் தொண்டாற்றி வருகிறார் பிரதமர் மோடி.

மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழுக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடுகிறேன்..! கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளுக்கும்,  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று வரும் நமது பிரதமர் திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் முன்மொழிந்து வருகிறார் என்பதை முதலமைச்சர் அவர்கள் பார்ப்பதில்லையா..? கடந்தாண்டு பொதுத் தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசிய பாரதப் பிரதமர், நமது தேசத்தின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் தான் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கும்  தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் வண்ணம்,  ‘காசித் தமிழ்ச் சங்கமம்’ விமரிசையாக நடத்தப்பட்டது என்பதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவில்லையா? நாடாளுமன்றம் புதிய கட்டிடத்தில் தமிழ்நாட்டின் பெருமையான செங்கோல்,  சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கான புதிய கட்டிடம் என்று,  தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதை கவனிப்பதில்லையா? மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த போது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை.

மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.  தமிழ் தான் எல்லாம் என்று இத்தனை ஆண்டு காலமாக பொய் சொல்லியே தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உங்களால்,  உங்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா..? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால்,  கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement