“உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை ஒழிப்பதும் கட்டாயமன்றோ?” - பாரதிதாசன் கவிதையை பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் கீழ் மும்மொழியை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரின் பேச்சுக்கு, தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : பிப்.25-ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!
மேலும், மும்மொழிக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மற்றும் கூட்டணி கட்சிகயினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மும்மொழி கொள்கை தொடர்பாக கவிஞர் பாரதிதாசனின் வரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறப்பட்டிருப்பதாவது,
"இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை
ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.