“தமிழ் சொற்களால் வணிக நிறுவனங்களை அடையாளப்படுத்துங்கள்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை அருகே உள்ள மதுராந்தகத்தில் வணிகர்கள் கோரிக்கை பிரகடன மாநாடு இன்று(மே.05) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்மராஜா மற்றும் ஆயிரக்கணக்கான வணிகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வணிகர்களிம் கோரிக்கைக்கு ஏற்ப சில முக்கிய அறிவுப்புகளை மேடையில் பேசினார். அவர் கூறியதாவது, “வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக இருப்போருக்கான உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்படும். உணவுப் பொருட்கள் விற்பனை தவிர்த்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சுய சான்றிதழ் அடிப்படையில் தொழில் உரிமம் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சி நீங்கலாக பிற மாநகராட்சிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்க அமைக்கப்பட்ட வழிகாட்டுக்குழுவைப் போல, சென்னையிலும் பிற நகராட்சிகளிலும் அமைக்கப்படும். மே 5-ம் தேதியை வணிகர் நாளாக அறிவிப்பதற்கான அரசானை விரைவில் வெளியிடப்படும். வர்த்தகர்கள், சிறு வியாபாரிகளுக்கான புதிய இணையதளம் உருவாக்கப்படும். 22 சேவைகளை இதன் மூலம் வணிகர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் வணிக நிறுவனங்களை திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. உங்கள் கடைகளுக்கு நல்ல தமிழ் பெயரைச் சூட்டுங்கள்; தனித் தமிழ் சொற்களால் உங்களது வணிக நிறுவனங்களை அடையாளப்படுத்துங்கள்; ஆங்கில பெயர்களை மாற்றிவிட்டு தமிழில் பெயர் சூட்டுங்கள்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.