"பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன்" - திருமாவளவன் கருத்துக்கு ராமதாஸ் பதில்!
பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 'பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன்' என்ற திருமாவளவனின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலிளித்த ராமதாஸ், "அது அவருடைய கருத்து அவருடைய கொள்ளை. அதற்கு நான் எதுவும் கூற முடியாது. ஒவ்வொருத்தருக்கும் கருத்து, கொள்கை உள்ளிட்டவை இருக்கும். முகுந்தனுக்கு வன்னியர் சங்கத்தில் பதவி வழங்கிப்பட உள்ளதாக பரவும் தகவல் உண்மையல்ல. குடும்பத்தில் உள்ளவர்களுக்கே பதவி கொடுப்பதாக அன்புமணி கூறியது முரண்பாடான கருத்து. உலகளவில், இந்திய அளவில் குடும்பத்தினருக்கு பதவி வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்" என்றார்.
இதையும் படியுங்கள் : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
அன்புமணி கலந்துக்கொண்ட கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பேசியபோது அங்கிருந்தவர்கள் சிரித்தது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராமதாஸ், "ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருக்கலாம். அதனால் சிரிப்பலை பொங்கலாம். இணையத்தில் பரவும் என்னை பற்றிய விமர்சனங்களுக்கு வருத்தப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது. மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆக கூடாதா? அவருக்கு பரிசோதனை செய்ததில் எந்த பிரச்னையும் இல்லை என்பதால் அவர் ஊருக்கு புறப்பட்டு சென்றார். அன்புமணி நடைபயணம் செல்வது நல்ல விஷயம்தான். தற்போது கூட்டணி குறித்து பேசும் எண்ணம் இல்லை" என்று தெரிவித்தார்.