"இதனை வாழ்நாள் சாதனையாளர் விருதாக நினைக்கிறேன்" - பத்மஸ்ரீ விருது பெற்ற செஃப் தாமு நெகிழ்ச்சி
நம் நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும்
உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று (ஏப்.28) நடைபெற்றது. விருதுகள் அறிவிக்கப்பட்ட 139 பேருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் விருதுகளை பெற்றனர். அதில் பத்ம ஶ்ரீ விருது பெற்ற சமையல்கலை வல்லுநரான தாமு இன்று (ஏப்.29) சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாமு பேசியதாவது,
"செய்தியாளர்கள் எப்போதும் எங்களுடன் இருப்பதற்கு மிகவும் நன்றி. பத்மஸ்ரீ
பட்டம் அதுவும் சமையல் கலையில் பெற்றதை பெருமையாக நினைக்கிறேன். தென்னிந்தியாவில் முதல் தமிழராக இந்த விருதை பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. காலை 11 மணியளவில் விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்த ஒத்திகை நடைபெற்ற போதே மிகவும் சிறப்பாக இருந்தது. பல நாட்களாக இவர்களை பார்க்க முடியுமா? என்று நினைத்த குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை நேரில் பார்த்தது மிகப்பெரிய விஷயமாக இருந்தது.
அவர்கள் எங்களுடன் உரையாடினார்கள். இவற்றையெல்லாம் கனவில் தான்
நினைத்திருந்தோம், இது நினைவானது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த விருதை வாழ்நாள் சாதனையாளர் விருதாக நினைக்கிறேன்.
இந்த விருதை கேட்டரிங் ஸ்டூடண்ட்ஸ், வளர்ந்து வரும் சமையல் கலைஞர்கள் மற்றும் சமையல் கலைஞர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். முதலில் எல்லாம் குக் என்றுதான் சொல்வார்கள் பின்னர் செப் என்று கூறினார்கள். இப்போது பத்மஸ்ரீ என்று சொல்வது பெருமையாக உள்ளது.
வளர்ந்து வரும் செஃப்களும் நிச்சயம் இதுபோல் விருது பெற முடியும். அதற்கு கடின உழைப்பு தேவை, அது மிக முக்கியம். மேலும் சமூகத்திற்கு தொண்டாற்றுவதும் அவசியம். கேட்டரிங் கல்லூரி மாணவர்களுக்கும் செஃப் கமிட்டி நினருக்கும் இது மிகப்பெரிய உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறேன். இருவரை மட்டும்தான் அரங்கிற்குள் அனுமதிப்போம் என்று தெரிவித்திருந்தார்கள். மிகவும் அவர்களிடம் வேண்டி கேட்டு நான்கு பேரை அனுமதிக்க சொன்னோம். என் மகள் மருமகன் பேத்தி அனைவரும் இதற்காகவே லண்டனில் இருந்து வருகை தந்தார்கள். அனைவரும் மிகவும் பெருமையாக உணர்ந்தார்கள்.
எனக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவ்வளவு பெரிய விருதாக இருக்கும் என்று நினைக்கவில்லை, நேரில் பார்த்த போது தான் தெரிந்தது. கடவுளுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கம் இந்த அளவிற்கு வளர்ந்து வந்ததற்கு ஒற்றுமை தான் காரணம். அந்த ஒற்றுமை எப்போதும் இருக்க வேண்டும். லண்டன் பார்லிமென்ட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளேன். நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளேன்" என்றார்.
வரும் ஆண்டுகளில் இயல்பாக மக்களிடையே உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் சொல்வது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "உணவு சரியாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் உடல் பருமன் ஏற்படும். அதற்கு நானே சான்று. உணவே மருந்து மருந்தே உணவு என்று சொல்கிறோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. சரியான உணவு சரியான அளவில் எடுத்துக் கொண்டு அதனுடன் உடற்பயிற்சியும் அவசியம். சமையல் கலை பணியை ஆத்மார்த்தமாக எந்த அளவிற்கு செய்கிறோமோ அந்த அளவிற்கு இதில் வெற்றி கிடைக்கும் இதுதான் நமக்கு உணவு அளிக்கிறது" என்று சமையல்கலை வல்லுநர் தாமு தெரிவித்தார்.