"ஆக்சனை தாண்டி காதல் படம் பிடிக்கும்" - நடிகர் அதர்வா!
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயான் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள டி.என்.ஏ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் நடிகர் அதர்வா ஆகியோர் கோவை பிராட்வே திரையரங்கிற்கு வருகை புரிந்து பார்வையாளர்களை சந்தித்து படம் குறித்து கேட்டு அறிந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய நடிகர் அதர்வா,
திரையரங்குகளில் குடும்பத்தினருடன் அனைவரும் படத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆக்சன் படங்கள் எனக்கு பிடிக்கும், ஆக்சன் காட்சிகளை விரும்பி செய்வேன் என தெரிவித்தவர் ஆக்சனை தாண்டி காதல் படம் பிடித்து உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தில் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு பல காட்சிகளை எடுத்துள்ளோம், குழந்தைகளுக்கு ஏற்ற நேரத்தில் தான் அந்த காட்சிகளை எடுக்க முடிந்தது. மேலும் பலே என்ற படத்தை தற்பொழுது தான் முடித்துள்ளேன், அது தவிர பராசக்தி மற்றும் இதயம் முரளி என்ற படங்களில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதயம் முரளி என்ற படத்தின் பெயரே எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு பெயர் என்று தெரிவித்த அதர்வா அது ஒரு நல்ல திரைப்படமாக அமையும் என தெரிவித்தார். மேலும் பேசியவர், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
சில படங்களை பான் இந்தியா படங்களாகவே எடுப்பதாகவும், சில படங்கள் பான் இந்தியா படமாக மறுவதாகவும் கூறிய அவர் அதனால் மொழி தடை உடைவது நல்ல விஷயமாக கருதுவதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், "வெகுஜன மக்களின் ரசனைக்கு பக்கத்தில் இருக்க வேண்டும் என்று யோசித்து இந்த படத்தை எடுத்துள்ளோம். இந்த படத்தை திரையரங்குகளில் பார்வையாளர்கள் பார்க்கும் பொழுது உணர முடிவதாக தெரிவித்தார்.
என்னுடைய திரைப்படத்தை கோவையில் பார்ப்பது இதுதான் முதல் முறை. திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கு மொபைல் போன் மிகப்பெரிய டிஸ்ட்ரக்ஷன் ஆக அமைவதாகவும் சமூக வலைதளங்களில் 30 நொடி என்டர்டைன்மென்ட் வீடியோவிற்கு நாம் பழகி விட்டதால் முழு படத்தையும் பார்ப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுத்து இருப்பதாக தெரிவித்தார்.