”இந்த தகவலை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்” - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!
பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாடு’ என்ற பெயரில் வருகிற மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாமல்லபுரத்தில் நடவுக்கவுள்ள இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இம்மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், இலட்சினை ஆகியவை வெளியானது. தொடர்ந்து இம்மாநாட்டையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பொது மக்களுக்கு டாக்டர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வேண்டுகோள்.! pic.twitter.com/NrxSvikGVB
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 7, 2025
இந்த நிலையில் மாநாட்டிற்கு வருபவர்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள். மே 11 ஆம் தேதி மாலை 4 மணி அளவில், மாமல்லபுரம் அருகில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பல லட்சம் மக்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இந்த மாநாட்டின் நோக்கம் சமூகத்தில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு சமூகநீதி கிடைக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டு நேரத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். அதனால் முன்னெச்சரிக்கையாக இந்த தகவலை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஞாயிறன்று ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் பகுதிகளை தவிர்க்க வேண்டும். அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மன்னிக்க வேண்டும். காரணம் இந்த மாநாடு சமூக நீதிக்கான மாநாடு. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.