"நான் வெறும் டிரெய்லர் தான், திமுக தலைவர் தான் மெயின் பிக்சர்" - கடலூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
"நான் வெறும் டிரெய்லர் தான், நமது திமுக தலைவர் தான் மெயின் பிக்சர்" என
கடலூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடலூரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து கடலூர் பாரதி சாலையில் திறந்த வேனில் பிரச்சாரம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..
“ வாக்கு மையம் செல்லும் போது காங்கிரஸ் வேட்பாளரின் பெயரும், கை சின்னம் மட்டுமே நியாபகத்தில் இருக்க வேண்டும். கடந்த முறை GO BACK Modi என பிரச்சாரம் செய்தோம். இந்த முறை GET OUT MODI என்று பிரச்சாரம் செய்கிறோம். குறைந்தது 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற வேண்டும்.
காலை உணவு திட்டம், பிங்க் பஸ் திட்டம் என ஒட்டுமொத்த மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தி வெற்றி பெற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . "எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல்" . தேர்தல்
வருகிறது என்ற காரணத்தினால் சிலிண்டர் விலை,பெட்ரோல் டீசல் விலையை குறைத்து
பிரதமர் மோடி நாடகமாடுகின்றார்.
நடைபெறவுள்ள தேர்தலில் 40க்கு 40 க்கு இடங்களில் வெற்றி பெற்று கலைஞர் கருணாநிதிக்கு சமர்பிக்க வேண்டியது நமது கடமை . ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும் போது, அதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிரெய்லர் ரிலீஸ் செய்வார்கள். "நான் வெறும் டிரெய்லர் தான். நமது திமுகத்தலைவர் தான் மெயின் பிக்சர். அவர் வருகிற 5ந்தேதி வருகிறார். அவர் தனது சாதனைகளை, திட்டங்களை எல்லாம் சொல்வார். உங்களிடம் அதிகமாக கேள்விகளை கேட்பார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. பற்றி கேள்விகள் கேட்பார்” என உதயநிதி ஸ்டாலின்
தெரிவித்தார்.