ஓசூர் | தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விரிசல் - சர்வீஸ் சாலை பயன்படுத்த அறிவுறுத்தியதால் போக்குவரத்து நெரிசல்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் கனகரக வாகனங்கள் மற்றும் கார், பேருந்துகள் உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.
இதில் குறிப்பாக ஓசூர் பேருந்து நிலையத்தையொட்டி செல்லும் தேசிய
நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம்
அமைக்கப்பட்டது. இந்த மேம்பலத்தின் வழியாக அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் இந்த மேம்பாலத்தில் இணைப்பு பகுதி விலகி உள்ளதாக, பணியாளர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறையின் தலைமை பொறியாளர் பிரச்சன்னா தலைமையில் பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்தனர். பிறகு வாகனங்கள் தொடர்ந்து சென்றால் மேலும் விலகிவிடும் என்பதால், மேம்பாலம் வழியாக பெங்களூர் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஓசூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலை வழியாக மாற்றி விடப்பட்டது.இதனால் வாகனங்கள் பேருந்து நிலையம் வழியாக தர்கா வரை சென்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்கிறது. 2 கிலோ மீட்டர் சர்வீஸ்சாலை வழியாக வாகனங்கள் மாற்றிவிடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தலைமை பொறியாளர் பிரசன்னா கூறும்போது, “மேம்பாலத்தின் வழியாக அதிகளவில் கண்டைனர் லாரிகள் செல்வதால் மேம்பலத்தின் தூணிற்கு மேல் உள்ள பாட்பேரிங் ( பானைபோன்ற கம்பிகள் )ஒரு பகுதி உடைந்திருக்கும் அல்லது விலகி இருக்கலாம். இதனால் மைய இணைப்பு பகுதி அரை அடிக்கு விலகி உள்ளது.
வாகனங்கள் செல்வற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. உயர்
அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம் ஹைதராபாத்திலிருந்து திட்ட அதிகாரி வந்து ஆய்வு செய்த பின்னர் ஜாக்கி வைத்து சீரமைக்கப்படும் அதன் பிறகு வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும்” எனக் கூறினார்.