கேரளா | பெண் நண்பர் உள்பட 5 பேரை சுத்தியால் அடித்துக் கொலை செய்த இளைஞர் - நடந்தது என்ன?
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்சாரமூடு பகுதியைச் சேர்ந்தவர் அஃபான்(23). இவர் தனது அம்மா, மூதாட்டி, சகோதரர், உறவினர்கள் இருவர் என 6 பேரை சுத்தியால் அடித்துக் கொலை செய்ததாகவும், மேலும் தானும் எலி மருந்து சாப்பிட்டுள்ளதாகவும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அவர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அஃபானின் சகோதரர், மூதாட்டி, காதலி, உறவினர்கள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அஃபானின் தாய் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். காவல்துறையினர் அவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அஃபானுக்கும், அவரது தாய்க்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து திருவனந்தபுரம் நீதிபதி இந்த வழக்கு குறித்து நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அப்போது அஃபானின் தந்தைக்கு வெளிநாட்டில் ரூ.70 லட்சம் கடன் இருப்பதாகவும், அதனை செலுத்த அஃபான் தனது வீட்டில் பணம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனது குடும்பத்தினர் பணம் தர மறுத்ததால் அஃபான் அவர்கள் 5 பேரையும் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, அஃபானின் தந்தையை தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்ததில், அவர் பணம் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்தார். எனவே, இந்த கொலைகளுக்கு வேறு காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் தனி பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.