கஞ்சா சாகுபடிக்கு ஹிமாச்சல பிரதேச அரசு அனுமதி!
இந்தியாவில் போதைப்பொருள்களின் புழக்கம், குறிப்பாக கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும்நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் கஞ்சா செடி வளர்க்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது தொழில், அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக, கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை வளர்க்க ஹிமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலாவில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களுக்கு இந்த அனுமதி பொருந்தாது என அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளுடன் இந்த கஞ்சா சாகுபடியை இரண்டு பல்கலைக்கழங்கள் மேற்கொள்ள அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. முக்கிய ஆய்வை மேற்கொள்ளும் பொருட்டு, சௌத்ரி சர்வான் குமார் கிரிஷி விஸ்வவித்யாலயா – கங்காரா மாவட்டம் மற்றும் டாக்டர் ஒய்.எஸ். பர்மர் தோட்டக்கலை பல்கலைக்கழகம் – சோலன் மாவட்டம் ஆகிய வேளாண் பல்கலைக்கழகத்தினர் மட்டும் ஆய்வு பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட அளவு கஞ்சா செடி வளர்த்து கொள்ளலாம் என தற்போது கூறப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் போன்ற மாநிலங்களை பின்பற்றி மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை வளர்க்க அனுமதி வழங்கியதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த செடி வளர்ப்பு கடுமையான கண்காணிப்பின் கீழ் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.