முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து அவதூறு - ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர், ‘நமது கோவில்கள்’ என்ற பெயரில் 'யூடியூப்' சேனல் வைத்துள்ளார். யூடியூபில் தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறாக பேசியதாக ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்றது.
அப்போது காவல்துறை தரப்பில், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும், புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது ரங்கராஜன் நரசிம்மன், பழிவாங்கும் நோக்கோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சத்தம் போட்டு வாதிட்டார். இதனால் கோபம் அடைந்த நீதிபதி இது சந்தை அல்ல, நீதிமன்றம் என கண்டித்தார்.
இதையடுத்து ரங்கராஜ நரசிம்மன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, புகாரை மேற்கொண்டு விசாரிக்க முகாந்திரம் உள்ளது என்றும், விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.