பெரியார் குறித்து அவதூறு - சீமான் மீதான 50க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இவற்றின் விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என தினமும் ஒரு காவல் நிலையத்தில் இருந்து சீமானுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சங்கர் ஆஜராகி, பெரியார் குறித்து சீமான் வடலூரில்தான் பேசினார். ஆனால் அந்தப் பேச்சுக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெரியாரை இழிவுபடுத்தி சீமான் ஒருபோதும் பேசவில்லை. பெரியார் பொதுக் கூட்டங்களில் பேசியது, நாளிதழ்களில் எழுதிய கட்டுரை ஆகியவற்றின் அடிப்படையில்தான் சீமான் பேசினார். எனவே, இந்த வழக்குகளை ஒன்றாக சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் புகார்தாரர்கள் யார்? வழக்கு எண்களின் விவரங்கள் என்ன? உள்ளிட்டவை இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை திரும்பப் பெற்று முழு விவரங்களுடன் மீண்டும் மனுவை தாக்கல் செய்யுங்கள்” என அறிவுறுத்தினார்.
அதற்கு சீமான் தரப்பில், இணையவழியில் வழக்கு விவரங்களைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அந்த விவரங்களை போலீசார் மறைத்துள்ளனர். எனவே, 50-க்கும் மேற்பட்ட வழக்குகளின் விவரங்களைச் சேகரித்து தாக்கல் செய்யும் வகையில் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி, இந்த மனுவில் எந்தெந்த காவல் நிலையங்களில் சீமானுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்ற எண்கள் குறித்து எந்த விவரமும் இல்லை. சம்பந்தப்பட்ட புகார்தாரர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களைக்கூட எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை. எனவே மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க இயலாது என மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.