கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
கேரளாவில் இந்தாண்டு எட்டு நாட்களுக்கு முன்பே தொடங்கிய தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் மேற்கு திசையில் காற்று வலுவடைந்து வருவதால் அடுத்த 5 நாட்களுக்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
தொடர்ந்து 12 ஆம் தேதி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 13 ஆம் தேதி மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12 ஆம் தேதி பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், 13 ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கும் மத்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.