கனமழை எதிரொலி | 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் – வடதமிழகம் – புதுவை – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (03-12-2025) காலை 05.30 மணி அளவில், வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (டிச.4) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த சில தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சென்னையில் பெரும்பாலான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (டிச.04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.