மும்பையில் கனமழை - ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!
மும்பையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது. மத்திய மராட்டியத்தில் நிலவிய காற்றழுத்தம் கிழக்கு-வடகிழக்கு நோக்கி மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் கடந்து சென்றதால் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் கனமழை காரணமாக குர்லா, சியான், தாதர் மற்றும் பரேல் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதில் 250க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டன. மும்பையின் நாரிமன் பாயிண்ட் பகுதியில் இன்று காலை 6 முதல் 7 மணி வரையில் 40 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில், மும்பை தானே மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு இன்று நாள் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், தேவையின்றி வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என மும்பை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.
இதில், மும்பை நகரில் கனமழையால் வெள்ளநீர் பல்வேறு பகுதிகளிலும் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில் போக்குவரத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை காலதாமதம் ஏற்பட்டது. மத்திய ரயில்வேயின் முக்கிய வழிகள் வழியே கல்யாண் நகர் நோக்கி செல்லும் ரயில்கள் 5 நிமிட தாமதத்துடனும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் செல்லும் விரைவு ரயில்கள் 10 நிமிட தாமதத்துடனும் செல்கின்றன. துறைமுகம் மற்றும் மேற்கு லைன் வழியே செல்லும் ரயில்களும் இதேபோன்று காலதாமதத்துடன் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.