கொல்கத்தா கனமழை பாதிப்பு - இயல்புநிலையை மீட்டெடுக்க ராகுல் வலியுறுத்தல்..!
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 251 மி.மீட்டர் கொட்டித்தீர்த்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை அளவாகும். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலை, ரெயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நேற்று பெய்த கனமழையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி, கொலகத்தாவை இயல்பு நிலைக்கு மீள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவைத் தாங்கிக் கொண்டிருக்கும் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க மக்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கல்கள்.
காங்கிரஸ் தொண்டர்கள் தங்களால் இயன்ற அனைத்து ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் இயல்புநிலையை மீட்டெடுக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் விரைவாக செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.